தொடக்கத்தில் புவனேஷ்வருக்கு லைன் மற்றும் லெந்த் செட் ஆகவில்லை. பாண்டியாவின் ஓவர்களும் பந்தாடப்பட்டன. ஆஃப் கட்டர்கள், ஷார்ட் பால்கள், யார்க்கர்கள் என எப்போதும் ஏதோ ஒன்றை ஆயுதமாக இந்தியா கையிலெடுக்கும். ஆனால், இந்தப் போட்டியில் திட்டமே இல்லாதது போல் ஸ்பின் பௌலிங்கை மட்டுமே நம்பிச் சரணடைந்திருந்தது. ஆசிஃப் மற்றும் குஷ்தீல் இருவரும் யார்க்கர்களுக்குத் திணறக் கூடியவர்கள். ஆனாலும், புவனேஷ்வர் அவர்களுக்கும் அவர்களது பலங்களான ஸ்லோ பால்களையும், ஷார்ட் பால்களையும்தான் வீசினார். புவனேஷ்வர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் காஸ்ட்லி ஓவர்கள்தான், இந்தியாவை இக்கட்டில் தள்ளின. குறிப்பாக, டெத் ஓவர்களில் பாண்டியா, புவனேஷ்வர் மற்றும் ரவி பிஷ்னாய் வீசிய வொய்டுகள் கணக்கிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலே, இந்தியாவுக்கு வெற்றி சுலபமாகி இருக்கும்.
எதிரிகளானது உதிரிகள் மட்டுமல்ல, கேட்ச் டிராப்களும்தான். 18-வது ஓவரில் ஆசிஃப் அலி தந்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் தவறவிட்டது, போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது. கடந்த போட்டியில் ஃபீல்ட் செட் அப்பில் பாபர் நிறையவே தவறவிட்டார். ஸ்லிப் கூட இல்லாமல் தொடக்க ஓவர்களைச் சந்தித்ததற்காக விமர்சிக்கப்பட்டார். இப்போட்டியில் இந்தியாவின் பௌலிங் மாற்றங்களும், ஃபீல்ட் செட்டிங்கும் அதைத்தான் நினைவூட்டின.