டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்ய, 183 ரன்கள் அடித்தது வங்கதேசம். இலங்கை அணியை பொறுத்தவரையில் வெறும் 10 ரன்களை மட்டுமே எக்ஸ்ட்ராஸாக அளித்திருந்தது. நோபால், வைட் என எதையும் வீசியிருக்கவில்லை அந்த அணி. ஆனால், அதே கவனத்தை ஃபீல்டிங் செட் செய்வதில் கடைபிடித்திருக்கவில்லை. வங்கதேச பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஸ்கூப் மற்றும் ராம்ப் ஷாட்களை ஆடி Third Man திசையில் பவுண்டரிகள் அடித்துக் கொண்டிருந்தனர். இதற்கேற்ற ஃபீல்ட் செட்டைக் கடைசியில்தான் மாற்றி அமைத்தார் ஷனகா. அதை முன்பே செய்திருந்தால் செய்திருந்தால் 20 ரன்கள் வரை குறைந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். மேலும் ஆறாவது பௌலரை இலங்கை கடைசி வரை உபயோகிக்கவே இல்லை.
மறுபுறம் 8 வைட், 4 நோபால் என 17 ரன்களை எக்ஸ்ட்ராஸாக வழங்கி சில கேட்சுகளை ட்ராப் செய்திருந்தனர் வங்கதேச அணியினர். சிறப்பாகப் பந்து வீசிக் கொண்டிருந்த மெஹதி ஹசனும் இரண்டு நோபால்களை வீசினார். அதில் குசல் மெண்டிஸ் அவுட்டான பந்து நோபாலாக மாறியது ஆட்டத்தின் மிக முக்கியமான திருப்புமுனை. ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்த எபாடட் ஹோசைன் இறுதி கட்டத்தில் நோபால், வைட் என ரன்களை அதிகமாகக் கொடுத்தார். இதுவே வங்கதேச அணியின் கைக்குள் பலமுறை வந்த போட்டி மீண்டும் மீண்டும் இலங்கை அணிக்கே சென்றது. கடைசி இரண்டு ஓவர்களுக்கு 25 ரன்கள் தேவைப்பட, 19வது ஓவரில் ஒரு நோபாலுடன் சேர்த்து 17 ரன்களை வழங்கியது அந்த அணி. இதனால் இறுதி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அங்கும் நோபாலை வீச 3 பந்துகள் மீதமிருக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது இலங்கை.
“உலகக்கோப்பையில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் இன்னும் பல இடங்களில் முன்னேற வேண்டும். சிறப்பான பயிற்சியின் மூலம் அதனை நாங்கள் அடைய முடியும்” என்று போட்டி முடிந்து கூறினார் ஷனகா.