தேசத்தின் கனவைச் சுமந்த கர்ணம்!
மேரிகோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து, மீராபாய், லவ்லினா, சாக்சி மாலிக் என கடந்த 10 ஆண்டுகளில் எக்கச்சக்க இந்திய வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றிருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக ஒரு உந்துசக்தியாக அமைந்தது என்னவோ கர்ணம் மல்லேஸ்வரிதான். 2000-ம் ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் பளு தூக்கும் போட்டியில் மொத்தமாக 240 கிலோ அளவுக்கு எடையை தூக்கி வெண்கல பதக்கத்தை வென்றிருந்தார். 1984-ல் பி.டி.உஷா தவறவிட்டதை கர்ணம் மல்லேஸ்வரி சாதித்துக் காட்டினார். இந்தியா சார்பில் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் பெண் அவரே!
அபினவின் தங்கம் ஏற்படுத்திய தாக்கம்:
2008-ல் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். தனிப்பட்ட விளையாட்டுகளில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் வீரர் அபினவ் பிந்த்ராதான். ஒலிம்பிக்ஸ் தங்கம் என்பதை விட, இந்தத் தங்கம் இந்திய பெற்றோர்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கம், அதுதான் ரொம்பவே பெரிது. பெற்றோர்களுக்கு விளையாட்டின் மீது ஒரு தனி மதிப்பை இந்தத் தங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் விளைவாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தனிப்பட்ட விளையாட்டுகளில் அதிகப்படியான சிறுவர்களும் சிறுமிகளும் பங்கேற்கத் தொடங்கினர். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோரின் இன்ஸ்பிரேஷனாக இருந்தது அபினவ் பிந்த்ராவே. அந்த வகையில் ஒரு தலைமுறையையே விளையாட்டை நோக்கி கவனம் குவிக்க வைத்த பெருமை அபினவ் பிந்த்ராவையே சேரும்.