பருப்புக் கடைசல்:
மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து, அதன் வற்றலையும் துணைக்குச் சேர்த்து ’மணத்தக்காளி பருப்புக் கடைசல்’ சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவற்றை நீக்கும் மருந்தாக இந்தப் பருப்புக் கடைசல் பயன்படும். நோய் நீக்குவது மட்டுமன்றி சுவையாகவும் இருக்கும். உடல் ஊட்டம் குறைந்த குழந்தைகளுக்கான ஊட்ட உணவாகவும் இதை உபயோகிக்கலாம்.
மணத்தக்காளி கீரையுடன் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவது, வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு. மணத்தக்காளியை கீரையாகப் பயன்படுத்த, சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என்கிறது சித்த மருத்துவம். மணத்தக்காளி செடியை அரைத்து நீரிலிட்டுக் காய்ச்சி, அந்த நீரைக்கொண்டு புண்களைக் கழுவலாம்.
பஞ்சம் போக்கிய பழம்:
கறுப்பு நிறத்திலும், சில வகைகளில் சிவப்பு நிறத்திலும் இதன் பழங்கள் காணப்படும். பழுக்காத காய்களை உட்கொள்வது நல்லதல்ல! பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட பஞ்சங்களின் போது, இதன் பழம் உணவாக அமைந்துள்ளது.
செரிமானப் பாதையில் உண்டாகும் புற்றுநோய் சார்ந்த ஆய்வில் மணத்தக்காளி சிறந்த முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. ஈரல் பாதிப்புகளை தடுக்கும் ஆற்றல் மணத்தக்காளிக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் (Anti-proliferative activity) சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
பசியைத் தூண்டும்
நோய் வராமல் தடுக்கவும், நோய் ஏற்பட்டாலும் அதைப் போக்கும் வல்லமையும் மணத்தக்காளிக்கு உண்டு. தாகத்தை தணிக்க மணத்தக்காளி பழம் உதவும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கவும், மலத்தை இளக்கவும், பசியைத் தூண்டவும் மணத்தக்காளி பழத்தைப் பயன்படுத்தலாம். மணத்தக்காளி காரக்குழம்பை ருசித்துப் பாருங்கள், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.