2023-ம் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த தென்னாபிரிக்க அணி அங்கு ஒரு நாள் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் தற்போது இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தென்னாபிரிக்க அணி. ஐ.பி.எல் போன்ற ஒரு புதிய டி20 தொடர் தென்னாப்பிரிக்கா நாட்டில் தொடங்கவிருப்பதே இதற்கான காரணமாக சொல்லியிருக்கிறது அந்த அணி நிர்வாகம். அதில் பங்குபெறவிருக்கும் ஆறு அணிகளையும் ஐ.பி.எல் அணி உரிமையாளர்களே இந்த தென்னாப்பிரிக்க டி20 போட்டிக்காக அணிகளையும் வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரின் அட்டவணையும் ஆஸ்திரேலியா தொடர் அட்டவணையும் ஒரே நேரத்தில் உள்ளதால் தென்னாப்பிரிக்கா அணி இந்த முடிவை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து வேறு போட்டிகள் நடக்க உள்ளதால் வேறு தேதிக்கு அத்தொடரை மாற்றமுடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கான ஒருநாள் சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியாவிற்கு 30 புள்ளிகள் தொடர் நடக்காமலே வழங்கப்படவுள்ளது. சூப்பர் லீக் புள்ளிபட்டியலில் தற்போது 11வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு, அடுத்தாண்டு ஒருநாள் உலககோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு எட்டாக் கனியாக மாறியுள்ளது.
ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்காளால் பாதிக்கப்படுவது டெஸ்ட் கிரிக்கெட் என்று பலரும் பேசிவரும் வேளையில் உண்மையாகவே பாதிக்கப்படுவது என்னவோ ஒருநாள் ஃபார்மர்ட் கிரிக்கெட் தான். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மாபெரும் விளையாட்டாக மாறியது 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னரே. அன்று தொடங்கி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல மறக்கமுடியாத ஒருநாள் போட்டிகள் நடந்துகொண்டேதான் இருந்தன. கங்குலி ரசிகர்களுக்கு 2002-ல் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றிக்கு பின் சட்டையை கழட்டிய தருணம், சச்சின் ரசிகர்களுக்கு 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, தோனி ரசிகர்களுக்கு 2011 உலகக்கோப்பை வெற்றி, கோலி மற்றும் ரோஹித் ரசிகர்களுக்கு 2013-ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 300 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தது என்று ஒருநாள் போட்டிகள் குறித்த நம் நினைவுகளை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த போட்டிகள் நடந்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும் இன்றும் அந்த போட்டி நடந்த தேதி வரும் போது அதை மறக்காமல் கொண்டாடி வருகிறோம். இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் ஒருநாள் கிரிக்கெட் அடையாளம் தரும் பல நினைவுகளை கொடுத்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.