ஐந்து முறை FIFA உலகக் கோப்பையை வென்று உலக கால்பந்தை தன் விரல் நுனியில் ஆட்டி வைக்கும் பிரேசில் அணி, முதன் முறையாக இந்திய ஆண்கள் தேசிய கால்பந்து அணியை, அதிகாரபூர்வ சர்வதேச நட்புப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, இந்திய கால்பந்து வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் பிரேசிலின் மூத்த ஆண்கள் தேசிய அணிகள் அதிகாரபூர்வ சர்வதேச போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறை. அதேபோல், இந்திய மண்ணில் பிரேசில் ஆண்கள் தேசிய அணி கால் பதித்து விளையாடுவதும் இதுவே முதன்முறை.
FIFA அறிமுகப்படுத்தியுள்ள “Super FIFA International Window’-இன் ஒரு பகுதியாக நடைபெறும் ஆசிய-ஓசியானியா சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளுக்குப் பிறகு பிரேசில் அணி கொல்கத்தா வருகிறது.
பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உறுதி
ஐந்து முறை உலகக் கோப்பையை முத்தமிட்ட சாம்ராஜ்யத்தை இந்தியா எதிர்கொள்கிறது என்பதாலேயே இந்தப் போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. FIFA தரவரிசை முறை அறிமுகமான 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அணி எதிர்கொள்ளும் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட அணிகளில் ஒன்றாக பிரேசில் மிளிர்கிறது. உலகின் அசைக்க முடியாத முன்னணி அணிக்கு எதிராக நம் இந்திய வீரர்கள் களமிறங்கிப் போராடும் பொன்னான வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.