பட மூலாதாரம், AFP via Getty Images
கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்பதை கத்தார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் உள்ள நகரத்தின் முக்கிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சுத்திகரிப்பு நிலையத்தில் “தொழில்நுட்ப விபத்து” ஒன்று ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது, இந்த வெடிப்பு காரணமாக நகரத்தின் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது.
இந்த வெடிப்பு நாட்டின் ஏற்றுமதியைப் பாதிக்காது என்று கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி கூறினார், மேலும் “இது ஒரு விபத்து, இது நாசவேலையோ அல்லது விரோதப் போக்கோ கொண்டதல்ல” என்றும் அவர் கூறினார்.
ராஸ் லஃப்பான் துறைமுகம் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைத் துறைமுகமாகும், மேலும் இது உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி வசதியைக் கொண்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரானிய தாக்குதல்களால் இலக்கு வைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பு ஜன்னல்களை அதிர வைத்ததுடன், மத்திய தோஹா முழுவதிலும் உணரப்பட்டது, இது ராஸ் லஃப்பானில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
பார்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அரசு பணியாற்றி வருவதாக ஷெரிடா அல்-காபி மேலும் கூறினார், அத்துடன் சுற்றுச்சூழல் அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், பணிகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பதைத் தீர்மானிப்பது கடினம் என்று எரிசக்தி அமைச்சர் கூறினார்.
“அவசரப் பராமரிப்புத் தேவைகள் காரணமாக 2025 டிசம்பர் முதல் ஆலையின் உற்பத்தி திட்டமிட்டு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது, இது இரண்டு நாட்களுக்கு முன்புதான் முதன்முறையாக மீண்டும் தொடங்கப்பட்டது” என்று ஷெரிடா அல்-காபி கூறினார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வெடிப்பில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை ஷெரிடா அல்-காபி உறுதிப்படுத்தினார்.
தோஹாவில் உள்ள இந்திய தூதரகம், தாங்கள் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
“நேற்று இரவு ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் நடந்த சோகமான சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, கத்தாரின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான கத்தார்எனர்ஜி, “ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் பார்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில்” இந்த வெடிப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்தியது.
“தீயைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரக்கால மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன, தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.”
முன்னதாக மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டிருந்த பணிகளைத் தொழிலாளர்கள் மீண்டும் தொடங்கியபோது இந்த வெடிப்பு ஏற்பட்டது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் கத்தார் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதால்,,இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் போது, பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட தாக்குதல்களால் ராஸ் லஃப்பான் துறைமுகம் “பலத்த சேதத்தை” சந்தித்தது.
இந்த ஆலைக்குத் தேவைப்படும் பழுதுபார்ப்புப் பணிகள் காரணமாக, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் உற்பத்தி 12.8 மில்லியன் டன்கள் குறையும் என்று கத்தார்எனர்ஜி தெரிவித்துள்ளது.
மோதலுக்குப் பதிலளிக்கும் விதமாக கத்தார் உற்பத்தியை நிறுத்தியிருந்தது, இது உலகின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பகுதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. கப்பல் போக்குவரத்து மூலம் விநியோகம் சமீபத்தில்தான் மீண்டும் தொடங்க ஆரம்பித்திருந்தது.
நெல்லையைச் சேர்ந்தவர் மரணம்
சிராஜ், பிபிசி தமிழ்
இதனிடையே உயிரிழந்தவர்களில் குறைந்தது ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் , ராதாபுரத்தைச் சேர்ந்த பபித், கத்தார் எண்ணெய் ஆலை விபத்தில் உயிரிழந்ததை இந்திய தூதரக அதிகாரிகள் தங்களுக்கு உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு