கால்பந்து உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 FIFA உலகக் கோப்பை தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், பல புதிய மாற்றங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது.
குறிப்பாக, ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து, ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் “நேரம் கடத்தும்’ யுக்திகளுக்கு முடிவு கட்ட FIFA மற்றும் சர்வதேச கால்பந்து சங்க வாரியம் (IFAB) இணைந்து 5 புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
போட்டியின் கடைசி நிமிடங்களில் மாற்று வீரர்கள் மெதுவாக வெளியேறுவது, காயங்களுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற நிகழ்வுகள் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைக் குறைப்பதாகப் பல ஆண்டுகளாக விமர்சனங்கள் இருந்துவந்தன. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள் என்னென்ன? அவை ஆட்டத்தை எப்படி மாற்றப்போகின்றன? விரிவாகப் பார்ப்போம்.
1. கோல்கீப்பர்களுக்கான 8 விநாடி விதி
பல கால்பந்து தொடர்களில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட இந்த விதி, இப்போது உலகக் கோப்பையிலும் அமலுக்கு வருகிறது. இதன்படி, ஒரு கோல்கீப்பர் பந்தை கையில் பிடித்த பிறகு, 8 விநாடிகளுக்குள் அதை மீண்டும் ஆட்டத்திற்குள் விட வேண்டும். முதல் மூன்று விநாடிகளை நடுவர் மௌனமாக எண்ணுவார். அடுத்த ஐந்து விநாடிகளுக்கு, நடுவர் தனது கையால் கவுண்ட்டவுனை வெளிப்படையாகக் காட்டுவார். குறிப்பிட்ட நேரத்திற்குள் கோல்கீப்பர் பந்தை வெளியேற்றத் தவறினால், எதிரணிக்கு கார்னர் கிக் வழங்கப்படும். இது தேவையற்ற கால தாமதங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.