ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின.
இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியைத் தழுவிய சென்னை அணி மூன்றாவது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் தொடரில் இருந்து வெளியேறுகிறது.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசியிருக்கும் குஜராத் கேப்டன் சுப்மன் கில், “ப்ளே-ஆஃபிற்கு முன்பு எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இந்த வேகத்தோடும், எழுச்சியோடும் அடுத்த கட்டத்திற்குச் செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. நிச்சயமாக ஒவ்வொரு முறையும் ஆட்டமிழக்கும்போது, “இதை விட சற்று வித்தியாசமாக விளையாடியிருக்கலாமோ’ என்று தோன்றத்தான் செய்யும். ஆனால், ஒட்டுமொத்தமாக எனது பேட்டிங் வடிவம் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.