தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசர மீட்டிங், அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது.
அமலாக்கத்துறை, தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல்துறைக்குக் கடிதம் எழுதியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவுசெய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் இயக்குநராக உள்ள ராகுல் நவீன், தமிழகம் வருகை தர உள்ளார். இந்தப் பயணம் திடீரென முடிவானதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் குறித்து அமலாக்கத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஏற்கெனவே அமலாக்கத்துறையில் தமிழக அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது கே.என்.நேரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அமலாக்கத்துறையின் விசாரணையில் பணமோசடி வழக்குகள் அதிக அளவில் நிலுலையில் உள்ளன. அதேபோல், அந்நிய செலாவணி வழக்குகள் பல, ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கவுகாதியில் நடந்த அமலாக்கத்துறையின் அகில இந்திய ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அடிப்படையில்தான் சென்னையில் மூன்று நாள்கள் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்தினை ராகுல் நவீன் நடத்த உள்ளார். இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளார்கள்.