Doctor Vikatan: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன்.
மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவரின் கை மற்றும் கால்களில் உள்ள திசுக்கள் ரத்த ஓட்டம் இன்றி அழுகத் தொடங்கியதால், கைகளையும் கால்களையும் அகற்றியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறதா… வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நக்கினாலும் தொற்று பரவுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

கேப்னோசைட்டோபேகா என்பது ஒரு சாதாரண பாக்டீரியா வகை. இது பலருடைய உமிழ்நீரில் (saliva) காணப்படக்கூடியது. இதில் Capnocytophaga canimorsus என்ற வகை பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளிடம் இருக்கும். பொதுவாக இதனால் பெரிய பாதிப்பு ஏதும் வராது. ஆனால், ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, இந்த பாக்டீரியா அதிக அளவில் ரத்தத்தில் கலந்தால் தொற்று (infection) ஏற்பட வாய்ப்புள்ளது.