இத்தலத்தில், ஆனந்தவள்ளி சமேத செளந்தரேஸ்வரர், தல விநாயகர், நவ வீரர்கள், கூத்தாடும் கணபதி, சுரத் தேவர், ஸ்ரீநிவாஸ செளந்தராஜப் பெருமாள், அனுமன், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
இத்தலத்தைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களுக்கும் எட்டுக்குடி முருகனே குலதெய்வமாக விளங்குகிறார். மீனவக் கிராம மக்கள் இத்தலத்து முருகனையே பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்முன், இங்கு வந்து முருகனை வழிபட்டு, சரவண பொய்கையின் தீர்த்தத்தை எடுத்துச் சென்று படகுகள் மீது தெளிப்பார்கள். அதன் பிறகே கடலுக்குச் செல்கிறார்கள்.

சுனாமிப் பேரழிவு பாதிப்பின்போது வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் என்ற மீனவக் கிராமத்தில் உயிரிழப்பைத் தடுத்தவர், இந்த எட்டுக்குடி முருகன்தான் என்று மீனவ மக்கள் நம்புகிறார்கள். எனவே ஆண்டுக்கு ஒருமுறை அந்த கிராம மக்கள் தங்கள் குடும்பத்தோடு பால்குடம் எடுத்து வந்து, இங்கே முடிகாணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர்.
இத்தல முருகனுக்கு அபிஷேகம் செய்து, அபிஷேகத் தேனைப் பிரசாதமாகப் பெற்று உண்டுவர மகப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி வேண்டிக்கொண்டு பிறக்கும் குழந்தையை இங்கே முருகனுக்கு தத்துக்கொடுப்பது வழக்கம்.
இத்தலத்தில் சத்ரு சம்ஹார ஹோமம் செய்தால் வழக்குகளில் வெற்றி உறுதி என்கிறார்கள்.
தைப்பூசம் இங்கே விசேஷம். காலையில் மஞ்சத்தில் வீதியுலா, மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா, சிறப்பு அபிஷேகங்கள், காவடி வேண்டுதல்கள் என்று கோலாகலமாக இருக்கும் கோயில்.
இங்கே வாழும் ஒரு குடும்பத்துக்கு `நாக்கறுத்தான் பரம்பரை’ என்ற பெயருண்டு. இதன் பின்னணியில் உள்ள வரலாறு சுவாரஸ்யமானது. தியாகராஜன் என்பவர் ஆண்டுதோறும் முருகப்பெருமானுக்குப் பால்காவடி எடுத்து வந்து வழிபடுவார். ஒரு முறை பாலுக்குப் பதிலாக பச்சை தண்ணீரை காவடியில் கட்டிக்கொண்டார். `இந்தத் தண்ணீர் எட்டுக்குடி முருகன் சந்நிதியை அடையும்போது அவனருளால் பாலாக மாறும்’ என்று சபையோர் முன்னிலையில் கூறிவிட்டுப் புறப்பட்டாராம்.
ஆனால், எட்டுக்குடியை அடைந்தபின், தண்ணீர் பாலாக மாறவில்லை. தவறான வாக்குறுதி கொடுத்ததற்காக, முருகன் சந்நிதியில் வைத்து தன்னுடைய நாக்கைத் துண்டித்துக் கொண்டார். ஆனால், ஒரு சொட்டு ரத்தம் சிந்தியதுமே அவரது நாக்கு மறுபடியும் ஒட்டிக்கொண்டது. தண்ணீர் குடம் பால் குடமாக மாறியது. அதைக் கண்ட அனைவரும் முருகப்பெருமானின் பேரரருளை எண்ணி வியந்து போற்றினார்களாம். இப்படிக் கலியுகத்தில் வாழும் தெய்வம் எனத் தன்னை நாள்தோறும் அடியவர்களுக்கு அருளி உணர்த்திவரும் எட்டுக்குடி முருகனை வாய்ப்பிருப்பவர்கள் சென்று வழிபட்டு வாருங்கள்.