பட மூலாதாரம், IMD website
தென்மேற்கு வங்க கடலில் இன்று காலை 5.30 மணிக்கு ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக தீவிரமடையும் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனழை பெய்யக்கூடும்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
பட மூலாதாரம், IMD website
மேலும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.
கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை என்பது 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ அளவிலான மழை அளவை குறிக்கும். மிக கனமழை என்பது 11.5 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழை அளவை குறிக்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை – வீடுகளை சூழ்ந்த மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், அச்சுந்தன்வயல், பரமக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

பாலாற்றில் வெள்ளம் – மக்களுக்கு எச்சரிக்கை
ஆந்திரா மாநிலம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் 22 அடி உயர தடுப்பணை நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. தமிழகத்தில் புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக பாலாறு சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கவோ கூடாது என்று திருப்பத்தூமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மேலும் அதிக மழை பெய்தால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 101.36 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் நீர் மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும் அப்படி திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு