இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் தாமாக முடிவுக்கு வந்தது.
இதன் காரணமாக, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா செப்டம்பர் 12 முதல் இடைக்கால தலைவராகச் செயல்பட்டு வருகிறார். அதேவேளையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறவிருக்கும் பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்துக்கு முன்பாக புதிய தலைவரை நியமிக்க பரபரப்பாக வேலை சென்றுகொண்டிருக்கிறது.

குறிப்பாக தேர்தல் இல்லாமல் நேரடியாகத் தலைவரை நியமிக்கவிருக்கிறது பிசிசிஐ. இது தொடர்பாக ஐ.பி.எல் சேர்மன் அருண் துமால், புதிய தலைவர் பதவிக்கு நாமினேஷன் இருக்கும் என்றும், ஆனால் தேர்தலின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் முன்பே கூறிவிட்டார். இந்த நிலையில், பிசிசிஐ-யின் அடுத்த தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்கப்போகிறார் என்று தகவல்கள் கசிந்து கொண்டிருந்த நிலையில், தலைவர் பதவிக்கு அவர் நாமினேஷன் செய்திருப்பது அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மும்பையில் இன்று, பிசிசிஐ துணைத் தலைவர் பதவிக்கு நாமினேஷன் செய்த ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம், தலைவர் பதவிக்கு மிதுன் மன்ஹாஸ் நாமினேஷன் செய்திருப்பதை உறுதிப்படுத்தினார்.