சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம்
கடந்த 29.08.2025 அன்று திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு கல்வி நிதி வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
அப்போது அவர், “பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் 43 லட்சம் மாணவர்களும் 2.2 லட்சம் ஆசிரியர்களும் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கையையும், அதன் மூலம் மொழிக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறேன்,” என்றார்.
இதற்கிடையில் சசிகாந்த் செந்திலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

`இது மடைமாற்றம்” – செல்வப்பெருந்தகை பேட்டி
அவருக்கு பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை,
“திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும். ஏனெனில் தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் ஓட்டு திருட்டு பிரச்சாரம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை மடைமாற்றம் செய்கிறோமோ என்கிற அச்சம் இருக்கிறது.
ஆகவே தலைவர் ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். உங்களுடைய உண்ணாவிரதத்தை இதோடு முடித்துக்கொள்ளுங்கள். நல்ல நோக்கத்தோடு செய்திருக்கிறீர்கள். ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல. தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு பிரச்சாரத்துக்கு நாமே தடையாக இருந்துவிடக்கூடாது,” எனப் பேட்டி கொடுத்தார்.
இவரது பேட்டி கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.