நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில், 18 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த தேவிக்கு, போதிய வருமானம் இல்லாததால் அக்கம்பக்கத்தவர்களிடம் கடன் வாங்கினார். ஒரு கட்டத்தில் கடன் அதிகரித்த நிலையில், ஈரோட்டில் உள்ள மணிமேகலை என்ற பெண் புரோக்கரிடம் தனது கிட்னியை விற்பதாகவும், அதற்கு ஈடாகப் பணம் பெற்றுத்தரும்படியும் கேட்டுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு தேவியின் உடல் உறுப்புகள் பரிசோதிக்கப்பட்டு, சட்டவிரோதமாக கிட்னியை விற்பதற்குப் போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது.
பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேவியை, அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில், அப்போது கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு, தேவியின் ரத்த வகை ஒத்துப்போகவில்லை. ஆனால், தனது கடன் சுமை குறித்துத் தெரிவித்த தேவி, எப்படியாவது கிட்னியை எடுத்துக் கொண்டு பணத்தைத் தரும் படி கேட்டுள்ளார்.
அதே நேரத்தில், மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளிக்குக் கல்லீரல் தேவைப்பட்டுள்ளது. இதனால் தேவியின் ஒப்புதல் பெற்று, அறுவை சிகிச்சை மூலம் அவரது கல்லீரலின் ஒரு சிறு பகுதி அறுத்து எடுத்து, நோயாளிக்குப் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.