இந்த நாளை மறக்க முடியுமா? – 17 வயதில் சச்சின் முதல் டெஸ்ட் சதம் விளாசி அசத்தல்! | Can you forget this day? – The day Sachin Tendulkar scored his first Test century at the age of 17

Share

மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், லெஜண்ட், ஜீனியஸ் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு விதந்தோதப்பட்ட உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த லட்சிய கிரிக்கெட் ஆளுமையான சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை ஓல்ட் டிராபர்டில் அடித்த நாள் இதுதான். 1990-ம் ஆண்டில் இதே நாளில் (ஆக.14) தனது 17 வயதில் சச்சின் டெண்டுல்கர் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டு டெஸ்ட் போட்டியை டிரா செய்தார்.

பாகிஸ்தானில் 1989-ம் ஆண்டு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுக இன்னிங்சில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த இன்னிங்சில் வக்கார் யூனிஸ் பவுன்சரில் மூக்கில் அடிப்பட்டு பிளாஸ்திரி போட்டுக் கொண்டு வந்து இரண்டு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் பவுண்டரிகளை அடித்தவர்.

அந்த பாகிஸ்தான் தொடரிலேயே பைசலாபாத்தில் 2-வது டெஸ்ட்டில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். லாகூரில் 41 ரன்களையும், சியால்கோட் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 35 ரன்களையும், 2-வது இன்னிங்சில் 57 ரன்களையும் எடுத்து கடினமான அந்தத் தொடரில் இந்தியா தோல்வியுறாமல் டிரா செய்து விட்டு வந்தனர். அந்தத் தொடரிலிருந்து சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் வளரும் நாயகன், வளரும் நட்சத்திரம் என்று ஊடக உலகில் வளைய வரத் தொடங்கியது.

பிறகு நியூஸிலாந்து தொடரில் நேப்பியரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 88 ரன்களை எடுத்தார் சச்சின், சதம் அடிப்பார் என்று ஆவலாக எதிர்பார்த்த தருணத்தில் டேனி மாரிசன் பந்தில் பின்னாளைய இந்தியப் பயிற்சியாளர் ஜான் ரைட் கேட்ச் எடுக்க ஆட்டமிழந்தார். அது அவருக்கே பெருத்த ஏமாற்றமளித்தது.

இந்நிலையில்தான் 1990-ல் இங்கிலாந்துக்கு இந்திய அணி சென்றபோது லார்ட்ஸ் டெஸ்ட்டில் 10,27 எடுத்து 2-வது டெஸ்ட்டிற்கு இந்திய அணி ஓல்ட்டிராபர்டுக்கு வருகிறது. இந்தத் தொடரில் பெரிய கவர்ச்சியே சச்சின் டெண்டுல்கர்தான். சச்சின் டெண்டுல்கர் என்னும் 17 வயது சிறுவனின் ஆட்டத்தைப் பார்க்க இந்திய, பாகிஸ்தானிய, இங்கிலாந்து ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டிய தொடர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கூச் (116), மைக் ஆர்த்தர்டன் (131), ராபின் ஸ்மித் (121) சதங்களுடன் 519 ரன்கள் குவித்தது. இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் சஞ்சய் மஞ்சுரேக்கர் (93), அசாருதீன் (179), எடுக்க, சச்சின் டெண்டுல்கர் 68 ரன்களை எடுக்க, இந்திய அணி 432 ரன்களை எடுத்தது. 2-வது இன்னிங்சில் ஆலன் லாம்ப் 109 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 320/4 என்று டிக்ளேர் செய்தது.

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 408 ரன்கள். இலக்கை விரட்டும் போது இந்திய அணி 127/5 என்றும், பிறகு கபில்தேவ் 26 ரன்களில் அவுட் ஆனபோது 183/6 என்றும் தோல்வி முகம் காட்டிய போது சச்சின் டெண்டுல்கரும் மனோஜ் பிரபாகரும் கடைசி இரண்டரை மணி நேரம் தாக்குப் பிடித்து 160 ரன்களைச் சேர்த்தனர். பிரபாகர் 67 ரன்களை எடுக்க, சச்சின் டெண்டுல்கர் 119 ரன்களை 17 பவுண்டரிகளுடன் விளாசினார் இருவருமே நாட் அவுட் ஆக இந்திய அணி 343/6 என்று ஆட்டம் முடிந்தது. டிரா ஆனது. ஒருவேளை இங்கிலாந்து முதல் நாளே டிக்ளேர் செய்திருந்தால் இந்திய அணியை சச்சின் வெற்றி பெறக்கூடச் செய்திருக்கலாம். ஏனெனில் 65 ரன்கள்தான் தேவை என்ற நிலை.

அன்று தன் முதல் சதத்தை அடித்தவர்தான் சச்சின் டெண்டுல்கர். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் சிட்னியில் 147, அதிவேக பவுன்ஸ் பிட்சில் 114 என்று வெளுத்து வாங்கிய பிறகே முதல் 15 டெஸ்ட் போட்டிகள் கடினமான பிட்ச்களில் வெளிநாட்டில் ஆடி விட்டுத்தான் இந்தியாவிலேயே அவர் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் டெஸ்ட்டை ஆடினார் என்பதும் சத சதங்கள் எடுத்த சதநாயகன் ஆக இன்று பிரமீடின் உச்சியில் இருப்பதும் வரலாறு.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com