இந்தியாவில் 2016-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஐ.சி.சி தொடர்.
தோனி கேப்டனாக விளையாடிய கடைசி ஐ.சி.சி தொடரான அதில், வங்கதேசத்துக்கெதிரான ஆட்டத்தில் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் அவர்கள் வெற்றி என்ற பரபரப்பான சூழலில், முஸ்தாபிஜூர் ரஹ்மானை தோனி ரன் அவுட் ஆக்கி இந்திய அணியை வெற்றி பெறவைத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அதேசமயம், வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 192 ரன்கள் அடித்தும் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்ததையும் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்தப் போட்டியில், 20 பந்துகளில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி என 43 ரன்கள் அடித்து அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸல், கடந்த சில நாள்களுக்கு முன்புதான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், 2016 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கெதிரான அரையிறுதிதான் தன்னுடைய கிரிக்கெட் கரியரின் பெஸ்ட் மொமெண்ட் என ஆண்ட்ரே ரஸல் கூறியிருக்கிறார்.