18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் ஐ.பி.எல் யை ஒளிபரப்பவிருக்கும் JioStar நிறுவனம் அவர்களின் Expert குழுவை சேர்ந்த முன்னாள் வீரர் பாலாஜியுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பாலாஜியுடன் உரையாடியதிலிருந்து முக்கிய விஷயங்கள் இங்கே.
இந்த ஐ.பி.எல் சீசனில் நிறைய தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த மாதிரியான செயல்பாட்டை எதிர்பார்க்கலாம்?
ஐ.பி.எல் மூலம் நிறைய தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது ஒரு நீண்ட பயணம் இந்த பயணத்தில் நிறைய தமிழக வீரர்கள் இந்திய அணியில் விளையாட சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், முக்கிய நகரங்களில் இருந்தும் திறமையான வீரர்களை ஐ.பி.எல் வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் புதிய தமிழக வீரர்கள் களம் இறங்குகிறார்கள். எனவே நான் ஐ.பி.எல் யை தமிழக வீரர்களுக்கான சிறந்த தளமாக பார்கிறேன். ஒரு சீசனில் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அறிமுகமாகி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளதை பார்த்திருக்கிறோம். மற்றொரு சீசனில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான் ஆகியோர் அறிமுகமாகி திறமையை வெளிப்படுத்தியுள்ளதையும் பார்த்துள்ளோம்.
இப்போது குர்ஜப்நீத் சிங், ஆண்ட்ரே சித்தார்த் போன்ற இளைஞர்கள் வாய்ப்பு பெற்றுள்ளது பார்க்கிறோம். எனவே ஐ.பி.எல் திறமையான வீரர்களை வெளிக்கொண்டு வரும் முக்கியமான களம் என்பதாக நான் பார்க்கிறேன். நட்சத்திர வீரர்களான எம் எஸ் தோனி போன்ற தலைமைத்துவம் கொண்ட வீரர்கள், சுப்மன் கில் போன்றவர்களுடன் நின்று விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை அவர்கள் பெறுகிறார்கள்.