
புனே: வீரர்கள் நிலைக்காமல் அவுட்டாகி வெளியேறியதன் விளையாக நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற நிலையில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று (அக்.24) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்தது ஆல்அவுட்டானது. இதையடுத்து விளையாடிய இந்திய அணியில் ரோகித் டக் அவுட்டானார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்களைச் சேர்த்தது இந்தியா.