சொந்த மண்ணில் தொடர் தோல்விக்கு பாக். முற்றுப்புள்ளி: இங்கிலாந்தை வீழ்த்தியது! | pakistan puts end card to winless run at home beats england multan test

Share

முல்தான்: இங்கிலாந்து அணியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 152 ரன்களில் வீழ்த்தி உள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இங்கிலாந்து அணி விளையாடிய போது இரண்டு இன்னிங்ஸ்களிலும் 20 விக்கெட்டுகளை பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்கள் சஜித் கான் மற்றும் நோமன் அலி வீழ்த்தினர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் கடைசிப் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது போட்டி கடந்த 15-ம் தேதி முல்தானில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்கள் எடுத்தது. பின்னர் பாகிஸ்தான் அணி 221 ரன்களை இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்தது.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. பென் டக்கெட் 0, ஸாக் கிராவ்லி 3, ஆலி போப் 22, ஜோ ரூட் 18, ஹாரி புரூக் 16, ஜேமி ஸ்மித் 6, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 37, கார்ஸ் 27, ஜேக் லீச் 1, ஷோயப் பஷீர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்த போது எதிர்கொண்ட 33.3 ஓவர்களையும் சஜித் மற்றும் நோமன் வீசினர். நோமன் அலி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சஜித் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com