ஏனெனில் 2012 இல் இறுதிப்போட்டியில் சேப்பாக்கத்தில் வைத்தே சென்னையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றிருந்தது கொல்கத்தா. அந்த சம்பவத்தை யாராலும் மறக்கவே முடியாது. 2021 இல் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன். 2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றபோது டேட்டா அனலிஸ்டுகளை கிரிக்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோர்கன் பயன்படுத்தியிருந்தார். அதே ‘Money Ball’ ஸ்டைலை இங்கேயும் கொண்டு வந்தார். முதல் பாதியில் தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி வரிசையாக தோல்விகளை கண்டிருந்தது. இரண்டாம் பாதியில்தான் மோர்கன் கேப்டனாக்கப்பட்டார். இந்த மாற்றத்தால் கொல்கத்தா வீறுகொண்டு எழுந்தது. தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்று ப்ளே ஆப்ஸூக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கும் வந்து சேர்ந்தது.
இறுதிப்போட்டி சென்னை vs கொல்கத்தா என்பதைத் தாண்டி தோனி vs மோர்கன் என்ற இரு ஆகச்சிறந்த கேப்டன்களின் சித்தாந்த மோதலாகவும் பார்க்கப்பட்டது. மோர்கனுக்கு நேர் எதிர் தோனி. அவர் அனலிஸ்ட்டுகளை அதிகம் நம்பமாட்டார். களத்தில் அந்த நொடியில் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை கேட்டு செயல்படக்கூடியவர். இரு அணிகளும் மோதிய அந்த இறுதிப்போட்டியில் சவாலே இல்லாமல் சென்னைதான் வென்றது. சாம்பலாகிப் போன அதே ஐக்கிய அரபு அமீரக மண்ணிலிருந்து சென்னை அணி மீண்டும் சாம்பியனாக உதயமானது.
2020 சீசனில் சென்னை அணி கடும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்த வேளையில், ‘இதுதான் உங்களின் கடைசி சீசனா?’ எனும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி, ‘Definitely Not’ என இரண்டே வார்த்தையில் உறுதியாக கூறியிருந்தார். இந்த சென்னை அணியை இப்படியே விட்டுவிட்டு செல்லமாட்டேன் என தோனி எடுத்துக்கொண்ட சபதமாகக் கூட அதை புரிந்துக்கொள்ளலாம். சொன்னதைப் போலவே அடுத்த சீசனுக்கும் வந்து சென்னையை சாம்பியனாக்கினார். சென்னை எவ்வளவோ வெற்றிகளைப் பெற்றிருக்கும் போதும் இந்த 2021 சீசன்தான் ஆகச்சிறந்த சீசன் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் தானே..!