டி20 க்களில் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இது. 111 ரன்களை அடித்திருந்த நிலையில் முஷ்டபிஜூரின் ஷார்ட் பாலில் சாம்சன் கேட்ச் ஆகியிருந்தார். ஒட்டுமொத்த ஹைதராபாத் மைதானமுமே எழுந்து கைத்தட்ட தலைநிமிர பேட்டை உயர்த்திக் காட்டி பெவிலியனுக்கு திரும்பினார் சாம்சன்.
சாம்சனுடைய கரியரில் இது ஒரு அதி முக்கியமான இன்னிங்ஸ். உள்ளூர் போட்டிகளிலும் ஐ.பி.எல் லிலும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு போராடி தேர்வாவார். ஆனால், இந்திய அணியில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் சொதப்புவார். விக்கெட்டை அநாமத்தாக விரயம் செய்வார். அணியிலிருந்து ட்ராப் செய்யப்படுவார். அப்படியொரு நிலையில்தான் இப்போது வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் இந்திய அணி சாம்சனை இன்னும் கூடுதலாக நம்பியது.
தொடருக்கு முன்பாகவே சாம்சன் தான் அணியின் ஓப்பனர் என கேப்டன் சூர்யா அறிவித்தார். சாம்சனின் டி20ஐ கரியரில் இதற்கு முன் 5 இன்னிங்ஸ்களில்தான் ஓப்பனிங் இறங்கியிருக்கிறார். பெரிய ரெக்கார்ட் எல்லாம் இல்லை. அப்படியிருக்க இந்த முறை அவருக்கு கிடைத்தது பெரிய வாய்ப்பு. ஆனாலும் முதல் இரண்டு போட்டிகளில் வழக்கம்போல சொதப்பினார். முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்தே 39 ரன்களைத்தான் எடுத்திருந்தார். இந்நிலையில்தான் தொடரின் கடைசிப் போட்டி சாம்சனுக்கு வாழ்வா சாவா போட்டியாக மாறி நின்றது. சாம்சனுக்கு முன்னால் இருந்தது இமாலயச் சவால். இத்தனை நாட்கள் தன் மீது வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களுக்கான பதிலை இந்தப் போட்டியில் அவர் அளிக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. இதிலும் சொதப்பினால் சாம்சன் பெரிய கேள்விக்குறியை மட்டுமே சுமக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால், சாம்சன் இந்த சவாலில் வென்றுவிட்டார். மறக்கவே முடியாத ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்துவிட்டார். தன்னுடைய திறன் என்னவென்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்.
காரம் உச்சிமண்டையில் ஜிவ்வென ஏறும் அளவுக்கு ஹைதராபாத்தில் ஒரு முரட்டு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார் சாம்சன். போயப்பட்டி ஸ்ரீனுவுடன் தனது அடுத்தப் படத்தை இன்று அறிவித்திருக்கிறார் பாலய்யா. வங்கத்தை சூறையாடிய சாம்சனின் ருத்ரதாண்டவத்தை பார்த்துவிட்டு பாலய்யாவே தனக்கு உதவியாக சாம்சனை கேமியோ செய்ய அழைத்தாலும் ஆச்சர்யமில்லை. அடி அந்த மாதிரி!