நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாகவும் அறிவித்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 160 ரன்களை எடுத்திருந்தது. பந்துவீச்சில் இந்திய அணி இரண்டு இடங்களில் கோட்டை விட்டிருந்தது. பவர்ப்ளேயில் நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டருக்கு நெருக்கடியை கொடுத்திருக்க வேண்டும். ஒன்று விக்கெட் எடுத்திருக்க வேண்டும், இல்லை ரன்களை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இது இரண்டையுமே இந்திய பௌலர்கள் செய்யவில்லை.
சூசி பேட்ஸூம், பிலிம்மரும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 67 ரன்களை சேர்த்திருந்தனர். முதல் 6 ஓவர்களுக்குள் 55 ரன்களை இந்த கூட்டணி சேர்த்திருந்தது. பூஜா, ரேணுகா தாகூர், தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி என விதவிதமாக நான்கு பௌலர்களை பயன்படுத்தியும் இந்தியாவுக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. இந்திய அணியின் பீல்டிங்கும் மோசமாகவே இருந்தது. சிறப்பான தொடக்கத்தை நியூசிலாந்தின் ஓப்பனர்கள் கொடுத்திருந்த நிலையில் 8 மற்றும் 9 வது ஓவரில் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அருந்ததி ரெட்டியும் ஆஷா ஷோபனாவும் இவர்களின் விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தனர். இதன்பிறகு மிடில் ஓவர்களில் இந்திய அணி கொஞ்சம் மீண்டது. ஆனால், மீண்டும் டெத் ஓவர்களில் இந்திய பௌலர்கள் ரன்களை வாரி வழங்கினர். கடைசி 4 ஓவர்களில் நியூசிலாந்து அணி 43 ரன்களை எடுத்திருந்தது. இதன்மூலம் 160 ரன்களை நியூசிலாந்து அணி எட்டியது.