நீண்ட நேரப் பணியை முடித்து வீடு திரும்பிய சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மாணவராகப் பணிபுரிந்திருக்கிறார் மருது பாண்டியன் (30). மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய ஆள்கள் இல்லாததால் கூடுதலாக டேட்டா ஆபரேஷன் பணியையும் பார்த்திருக்கிறார்.

டிசம்பர் 10-ம் தேதி அன்று நீண்ட நேரம் தொடர்ந்து பணி செய்துவிட்டு திரும்பிய மருத்துவர் மருதுபாண்டியன் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ள நிலையில் இளம் வயதிலேயே மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அவரின் குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேபோல் சென்னை அயனாவத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் சோலைசாமி டிசம்பர் 11-ம் தேதி 24 மணி நேர தொடர் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அனைத்து மருத்துவர்களுக்கும் அதீத பணிச்சுமை ஏற்படுகிறது. இதுவே இரு மருத்துவர்களின் மரணத்துக்கும் காரணம் என மருத்துவத் துறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.