Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே எனக்கு கால் குடைச்சல் வந்துவிடுகிறது. லேசான ஈரப்பதம் கூட ஒத்துக்கொள்வதில்லை. பெயின்கில்லர் போட்டால்தான் சரியாகிறது. இதற்கு என்ன காரணம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
மழை மற்றும் குளிர்காலங்களில் superficial blood vessels எனப்படும் மேலோட்டமான ரத்தக் குழாய்கள் சுருங்கும். அதனால் நம் சரும நிறம் கூட சற்று வெளிறி காணப்படும். அதாவது, கோடைக்காலத்தில் இருப்பதைப் போல குளிர்காலத்தில் நம் சரும நிறம் அவ்வளவு கறுப்பாக இருக்காததற்கும் இதுதான் காரணம். குளிர்காலத்தில் கதகதப்பான உடைகளை அணியாவிட்டால், குளிரானது, எலும்புகள் வரை பாயும்.
ரத்த ஓட்டம் குறைவதுதான் கை, கால்களில் ஏற்படும் வலி மற்றும் குடைச்சலுக்கு முக்கிய காரணம். தவிர, குளிர்காலத்தில் உடல் மந்தமாக, சோம்பேறித்தனதமாக இருக்கும். உடற்பயிற்சி செய்ய உடல் ஒத்துழைக்காது.