அனியூரிஸம் என்றால் என்ன… இந்த நோய் மரணத்துக்கு காரணமாகுமா… என்ற கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் எம்.பாலமுருகன் பதில் அளித்துள்ளார்.
“அனியூரிஸம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தின் சுவரில் உண்டாகும் பலவீனத்தால், பலூன் போன்று வீக்கம் ஏற்பட்டு அதில் இருந்து ரத்தம் வெளியேறுவது. அனியூரிஸம் இருக்கும் நபருக்கு அந்த வீக்கமானது கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து மில்லிமீட்டர் வரும் வரை, எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் ப்ளிஸ்டர் அனியூரிஸம் (Blister aneurysm) அதாவது சிறிய அனியூரிஸமாக இருந்தால், ரத்தம் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதே போல் ஜயன்ட் அனியூரிஸம் (giant aneurysm) அதாவது பெரிய அனியூரிஸம், கண் நரம்பு போன்ற இடங்களில் வந்தால் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும். அதிகமான ரத்தம் வெளியேறுவதன் மூலம்தான் அனியூரிஸம் என்று தெரிய வரும்.
அனியூரிஸம் என்பது எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், 50 முதல் 60 வயதை உடையவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவர். ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் இருபவர்களுக்கு அனியூரிஸம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அனியூரிஸம் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமான ரத்த அழுத்தத்தால் அந்த வீக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக ரத்தம் வெளியேறும். அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, கண் நரம்பு பாதிப்பு போன்ற விளைவுகள் ஏற்படலாம்.