அறிகுறிகள்
மஞ்சள் காமாலை முதலில் கண்ணில்தான் வெளிப்படுகிறது. கண்களில் மிகவும் மெல்லிய வெள்ளை நிறப் பகுதி ஸ்க்லீரா. பிளிருபின் அதிகமாக இருந்தால் ஸ்க்லீரா பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்துக்கு மாறும்.
கண்ணில் மஞ்சள் காமாலை வந்திருப்பதைக் கண்டறிய பாதிக்கப்பட்டவரை இயற்கை வெளிச்சத்தில் வைத்துப் பரிசோதிப்பதே சிறந்த முறை. செயற்கை விளக்கொளியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படும்.
நாக்கு, மேல் அன்னம், உள் உதடு, கைகள் போன்றவற்றில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பித்தநீர் சரியாக வெளியேறாது. எனவே, பித்த உப்பு உடலில் தங்கிவிடும். பிளிருபின், பித்த உப்புடன் சேர்ந்தால், தோலில் அரிப்பு ஏற்படும்.
பசியின்மை, உணவைப் பார்த்தாலோ, உணவு வாசனையை நுகர்ந்தாலோகூட குமட்டல் உணர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், மஞ்சள் காமாலை இருக்கலாம்.
மஞ்சள் காமாலையைத் தடுக்க ஈஸி டிப்ஸ்
மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.
எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கை கழுவ வேண்டும்.
சாலை ஓரங்கள், சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்கறி, பழங்கள் போன்ற எதையும் சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.
கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது, சமைக்கவும் கூடாது. கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.
கழிவறையைப் பயன்படுத்திய பின், சிறுநீர் கழித்த பின், கைகளை நன்றாக கிருமி நாசினி பயன்படுத்தி கழுவ வேண்டும்.
நகம் வளர்க்கக் கூடாது. நகம் கடிக்கக் கூடாது.
நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
நண்பர்கள், உறவினர்கள் என யாருடைய பிரஷ், ஷேவிங் செட் போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஊசியையே பயன்படுத்த வேண்டும்.
– பு.விவேக் ஆனந்த்