பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அப்போது ஊழல் தொடர்பாகக் கருத்து தெரிவித்த அண்ணாமலை, `தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.’ என்று குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பதாக அ.தி.மு.க தரப்பிலிருந்து அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தன்னை முன்னிலைப்படுத்தும் அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. அவருக்கு வரலாறு, பாரம்பர்யம் என எதுவும் தெரியாது. ஜெயலலிதா குறித்த விமர்சனம் வன்மையாகக் கண்டிக்கக்கூடியது. கூட்டணி தர்மத்தை மீறியிருக்கிறார். அமித் ஷாவும், நட்டாவும் உரியவகையில் அண்ணாமலையைக் கண்டிக்க வேண்டும். மாநில தலைமைக்குத் தகுதி இல்லாதவர். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தொடரக் கூடாது என்பதாகத்தான் அவரின் பயணம் இருக்கிறது. அண்ணாமலையின் இந்தப் போக்கு தொடர்ந்தால், கூட்டணி குறித்து அ.தி.மு.க உரிய நேரத்தில் முடிவுசெய்யும்” எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
ஜெயக்குமாரின் பேச்சுக்கு பா.ஜ.க முகாமிலிருந்து அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் எதிர்வினையாற்றியிருந்தார்.