சொல்லப்போனால், பாண்டிங்கிற்கு மட்டுமல்ல. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தைப் பார்த்த அத்தனை பேருக்குமே இந்த ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது. ஐ.சி.சி யின் தரவரிசைப்படி இன்றைய தேதிக்கு உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌலர் அஷ்வின்தான், ஆனால் இந்திய அணி ஆடும் முக்கியமான இறுதிப்போட்டியில் அவருக்கு இடமில்லை. இதை கேட்பதற்கே கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. எனில், அந்தச் சூழலில் நிற்கும் அஷ்வினுக்கு இது எப்படியொரு உணர்வை கொடுக்கும்? ஆனால், இந்த மாதிரியான ஏமாற்றங்களை இதற்கு முன்பே அஷ்வின் எதிர்கொண்டிருக்கிறார்.
இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஸ்பின்னராக இருந்த அஸ்வினை, குல்தீப் யாதவ்வின் வருகைக்குப் பிறகு ஓரங்கட்டத் தொடங்கினார்கள். இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் அஷ்வினைப் பயன்படுத்தினார்கள். ‘வெளிநாட்டு மைதானங்களில் ஒரே ஒரு ஸ்பின்னருக்குதான் இடமிருக்கிறது எனில் அந்த ஒரு இடம் குல்தீப்க்குதான்’ என பயிற்சியாளர் குழுவே வெளிப்படையாக அறிவிக்கும் நிலையே இருந்தது. அந்த அளவுக்கான ஓரங்கட்டுதல்களை எதிர்கொண்ட போதும் அஷ்வின் சோர்ந்திடாமல் போராடினார். மீண்டும் அவர் இழந்த இடத்திற்கு கடுமையாக போராடி வந்தடைந்தார். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியும் இங்கிலாந்தில்தான் நடந்திருந்தது.