அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் விஜயபாஸ்கர். இவர் 2016-21 காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து 2021, அக்டோபர் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் அவர் தொடர்புடைய 50 இடங்களில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோடிக்கணக்கில் பணம், நகை, ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன.
இதில், ரூ.35,79,90,081 வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக, விஜயபாஸ்கர், அவருடைய மனைவி ரம்யா ஆகியோர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த நிலையில்தான், இன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி இமயவர்மன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், இது தொடர்பாக, புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 216 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.