சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தற்போது ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா, டிடிவி தினகரன் அணி என்று 4 பிரிவாக இருந்து வருகிறது. தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் எல்லாரும் ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. அணியில் இருக்கிறார்கள். வடமாவட்டம், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் மட்டும் தான் எடப்பாடி அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேற்கு மாவட்டம் என்பதால் நாம் நின்றே ஆக வேண்டும். கவுண்டர் சமூகத்தின் வாக்குகள் 10% இருக்கிறது.
இந்த 10 சதவீதத்தை வாங்கினால் போதும் என்று எடப்பாடி நினைத்தார். அதனால், இடைத்தேர்தலில் கண்டிப்பாக நிற்க வேண்டும் என்ற நிலைக்கு எடப்பாடி வந்தார். அதே நேரத்தில் மேற்கு மாவட்டம் என்பதால் ஓபிஎஸ் நிற்க மாட்டார் என்று பாஜ தலைவர் அண்ணாமலை நினைத்தார். ஆனால், ஓபிஎஸ் முதலியார் வேட்பாளரை நிறுத்தி அதில் கணிசமான வாக்குகளை பெறலாம் என்று நினைத்தார். இதற்காக முதலியார் சங்கத்திடமும் ஓபிஎஸ் பேசினார். முதலியார் சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த போகிறார் என்று தெரிந்தவுடன் பாஜக பின்வாங்கியது. கண்டிப்பாக ஓட்டுகள் இரண்டாக பிரியும். இரண்டு பேரும் ஒன்று சேருங்கள் என்று பாஜ கூறியது. இதற்கு எடப்பாடி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், பஞ்சாயத்து தொடர்ந்தது. இரண்டு பேரும் வேட்பாளரை நிறுத்த போகிறோம் என்று ஆதரவு கேட்டார்கள்.
மேற்கு மண்டலத்தில் குறிப்பாக அண்ணாமலையும், எடப்பாடியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால், 2 பேரையும் மூத்த தலைவர்கள் பஞ்சாயத்து செய்து, இரண்டு பேரும் தேர்தலில் ஒற்றுமையாக இருங்கள் என்றனர். இதனால், அண்ணாமலை எடப்பாடி பக்கம் சாய ஆரம்பித்தார். இது ஓபிஎஸ்சுக்கு தெரியவந்தது. இதனால் அவர் கடுப்பானார். ஓபிஎஸ் அணியில் உள்ள ஜே.சி.டி.பிரபாகரன் நீங்கள் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக எங்கள் தொண்டர்கள் கருதுகின்றனர் என்று தலைவர்கள் மத்தியில் வெளிப்படையாக தெரிவித்தார். ஓபிஎஸ் அணியினர் இப்படி பேசியதால் அண்ணாமலை பின்வாங்கினார்.
இந்த இழுபறி பஞ்சாயத்துக்கு மத்தியில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி அணிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை. மூத்த தலைவரான கே.வி.ராமலிங்கம் ஈரோடு மேற்கு தொகுதியில் அமைச்சர் முத்துசாமியிடம் தோற்றவர். அவரை நிறுத்தலாம் என்று எடப்பாடி பார்த்தார். ஆனால், தேர்தலில் நிற்க மாட்டேன் என்று கே.வி.ராமலிங்கம் கூறிவிட்டார். தென்னரசு 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் தான் அவருக்கு கடந்த முறை சீட் வழங்கவில்லை. உள்ளூர் தலைவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
வேறு வழி இல்லாததால் எதிர்ப்பு இருக்கும் வேட்பாளரை தேர்வு செய்தார் எடப்பாடி. இதுவும் அதிமுகவுக்கு பெரும் சறுக்கலை ஏற்படுத்தியது. அதிமுகவில் எல்லா மட்டத்திலும் எடப்பாடிக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொட்டது எல்லாம் சறுக்கிக்கொண்டே போனது. இந்த நிலையில் தான் வேட்பாளரை அறிவித்து, நீதிமன்றம் மூலமாக இரட்லை இலையே வாங்கினார். அது தற்காலிக வெற்றியாக இருந்தாலும் கூட, இரட்டை இலை கிடைத்ததையே ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல எடப்பாடி கருதினார்.
கூட்டணி பிரச்னை, வேட்பாளர் பிரச்னை உள்பட ஏகப்பட்ட பிரச்னை. கடைசியில் எடப்பாடிக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்தார். இரட்டை இலை கிடைத்ததால் அண்ணாமலையை கழற்றி விடலாம் என்று பார்த்தார். அதே நேரத்தில் அண்ணாமலை பிரசாரத்திற்கு வருவதாக அறிவித்தார். அங்கு 40 சதவீதம் சிறுபான்மையினர் இருக்கிறார்கள். அதனால் பாஜவினர் யாரும் பிரசாரத்திற்கு வர வேண்டாம். பாஜ கொடியை பயன்படுத்த வேண்டாம் என்று அதிமுக சார்பில் அறிவித்தார்கள். இது பாஜவுக்கு கடுப்பை ஏற்படுத்தியது. இதனால், அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் எடப்பாடி திருந்துவார் என்று பாஜ கருதியது.
அவர்களும் காங்கிரசுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்தனர். இப்படி எல்லா பக்கமும் எடப்பாடிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாக இருந்தது வாசன் மட்டும் தான். அவருக்கு அங்கு வாக்கு வங்கி என்பது சுத்தமாக இல்லை. ஏற்கனவே அங்கு தமாகா சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட யுவராஜின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலை தான் அங்கு இருந்தது. இருந்த போதிலும் எடப்பாடிக்கு இருந்த ஒரே நம்பிக்கை பணம் தான். பணத்தை வைத்து தேர்தலில் வென்று விடலாம் என்று நினைத்தார். இதற்காக எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் இவர்களை அழைத்து பணம் செலவு செய்யுங்கள் என்றார்.
வருமான வரித்துறை பிரச்னை, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குகள் இருப்பதால் எங்களால் பணம் செலவு பண்ண முடியாது என்று அவர்கள் கைவிரித்து விட்டனர். அதனால், எடப்பாடி தான் மொத்த பணத்தையும் இறக்கினார். எடப்பாடியின் சகலை ஈரோட்டில் இருக்கிறார். அவர் மூலமாக ரூ.50 கோடி வரை இறக்கி செலவு செய்தார்கள். அப்படியிருந்தும் தோல்வியை சந்தித்தனர். ஆதரவாக வந்த ஓபிஎஸ்சையை புறந்தள்ளி விட்டார். தேர்தலுக்கு கூட ஒற்றுமையாக இருப்பது போல காட்டியிருக்கலாம். ஆனால், சிங்கிள் தலைமை வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ்சை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார். அதனால், தொண்டர்களும் அதிருப்தியடைந்து விட்டார்கள்.
கடைசியில் சமுதாய ஓட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அங்கிருந்த முதலியார்கள், அருந்ததியினர் மற்றும் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக மாறி விட்டார்கள். இதனால மொத்தமும் எடப்பாடிக்கு எதிராக தான் இருந்தது. பணத்தை வைத்து டெபாசிட் மட்டும் தான் வாங்க முடிந்தது. திமுகவுக்கு உண்மையான போட்டியை கொடுக்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் எடப்பாடியின் பிடிவாதம் தான் காரணம் என்று அதிமுக தொண்டர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள். தோல்வியால் தொண்டர்களும் எடப்பாடிக்கு எதிரான மனநிலைக்கு மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது. பணத்தை வைத்து டெபாசிட் மட்டும் தான் வாங்க முடிந்தது. திமுகவுக்கு உண்மையான போட்டியை கொடுக்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் எடப்பாடியின் பிடிவாதம் தான் காரணம் என்று அதிமுக தொண்டர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.