இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்

Share

அதிமுக ஓபிஎஸ் அணியில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக செந்தில்  முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முனிசிபல் காலனியில்  தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. பணிமனையில் வைப்பதற்காக  நேற்று முன்தினம் இரவு பிளக்ஸ் பேனர் தயார் செய்யப்பட்டது. அந்த பேனரில்  எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான  ஜான்பாண்டியன், ஏசி. சண்முகம், தனியரசு ஆகியோர் படம் இடம் பெற்றிருந்தது.  ஆனால் பாஜ தலைவர்களான பிரதமர் மோடி, தேசிய தலைவர்  ஜே.பி. நட்டா, மாநில  தலைவர் அண்ணாமலை ஆகியோரது படங்களும், தேசிய ஜனநாயக கூட்டணி என்பதும்  இடம்பெறவில்லை.

இந்நிலையில், நேற்று  ஓ.பன்னீர்செல்வத்தை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்த  பிறகு மீண்டும் பிளக்ஸ் பேனர் மாற்றப்பட்டது.  அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் ஒரு பக்கத்திலும், பிரதமர் மோடி, ஓபிஎஸ்  படங்கள் மறு பக்கத்திலும் வைக்கப்பட்டதோடு கூட்டணி கட்சி தலைவர்கள் என்ற  வகையில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை, ஏசி.  சண்முகம், தனியரசு, ஜான் பாண்டியன் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தது.  தேசிய ஜனநாயக கூட்டணி என குறிப்பிட நினைத்து அதிலும் தவறான வார்த்தையாக  ‘ஜனநாயக’ என்பதற்கு பதிலாக ‘ஜனநாய’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, இபிஎஸ் அணி சார்பில் 3 முறை பேனர் மாற்றப்பட்ட நிலையில், ஓபிஎஸ் அணியும் 3 முறை பேனரை மாற்றியதால், மானத்தை வாங்குறாங்களே என நிர்வாகிகளும், தொண்டர்களும் தலையில் அடித்து கொண்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com