`இந்தியக் கிரிக்கெட் உலகின் சமகால சாணக்கியர்’ என்ற வரையறைக்குள் பொருந்திப் போகக்கூடியவர் கௌதம் கம்பீர்.
மூன்று ஃபார்மேட்களிலும் முத்திரை பதித்தவர், முத்தாய்ப்பாக 2007 மற்றும் 2011 ஆகிய இரு உலகக்கோப்பைகளை இந்தியா முத்தமிடுவதற்கு முக்கியப் பங்காற்றியவர், இரு ஐபிஎல் கோப்பைகளை கொல்கத்தாவை ஏந்த வைத்த இணையற்ற கேப்டன் என அவர் எட்டிய சாதனைகள் எத்தனையோ!
இருப்பினும் இவை மட்டுமே அவரது சிறப்பம்சங்கள் அல்ல. இப்பதங்களையும் தாண்டி கம்பீரை முன்னாள் வீரர்களில் முன்னிலைப்படுத்துவது கிரிக்கெட் குறித்த அவரது ஆழமான கருத்துக்களும், விஷய ஞானமும், விசாலமான பார்வையும்தான். களம் சார்ந்த பல நுணுக்கமான விஷயங்களை யாருமே சிந்திக்காத கோணத்தில் இருந்து அணுகுவதுதான் அவரது தனித்தன்மை.
இது பல்லாண்டு கிரிக்கெட் அனுபவத்தால் வந்ததல்ல, அவரோடே எப்போதுமே இயல்பாகவே பயணித்த ஒன்று. கொல்கத்தாவின் கேப்டனாக வலம் வந்த காலத்திலேயே அவரது தந்திரோபாயங்கள்தான் அந்த அணியை பட்டைத் தீட்டியது. 2012-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் மெக்கல்லமுக்குப் பதிலாக பிஸ்லாவை ஆட வைத்ததில் தொடங்கி யாருமே எதிர்பார்க்காத வகையில் சுனில் நரைனை ஓப்பனராகக் களமிறக்கி அவரை மேட்ச் வின்னராக மாற்றியது வரை என அவரது நகர்வுகள் கே.கே.ஆரை வலுப்படுத்தி வெற்றிக்கு வழிகோலியது. மற்றவர்கள் கண்களில் கல்லாகக் காணப்படுவது சிற்பியின் கண்களில் சிற்பமாகத் தெரிவது போல ஒரு கேப்டன், பயிற்சியாளரின் இன்ஃப்ரா ரெட் கண்களில் எந்த வீரரின் திறனும் தப்பாது. அவ்வகையில் ஒரு வீரரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எப்படி அவரை அணியின் ஊர்தியாக்கி வெற்றிவலம் செல்ல வேண்டுமென்பதறிந்த சைலண்ட் கில்லர் கம்பீர்.