மெட்டா இந்தியாவின் தலைவராக இருந்த அஜித் மோகன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு நேரடி தொழில் போட்டியாளரான ஸ்னாப் நிறுவனத்தில் இணைவதாக தெரிய வந்துள்ளது.
பேஸ்புக் ஆனது மெட்டா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு புதிய மாற்றங்களை செய்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் அதற்கு கடும் போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு போட்டியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபட்டு வருகின்றனர். அரசியலில் கட்சி விட்டு கட்சி தாவுவது போல, தொழில்போட்டி நிறுவனங்களுக்கிடையே பணியாளர்கள் தாவி வருவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் யாரும் எதிர்பாராத வண்ணம் மெட்டா இந்தியாவின் தலைவராக இருந்த அஜித் மோகன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அந்நிறுவனத்திடம் அளித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. மெட்டா நிறுவனத்திலிருந்து விலகி போட்டி நிறுவனமான ஸ்னாப் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரியவந்துள்ளது.
அஜித்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அப்பொழுது பேஸ்புக் என்ற பெயரிலிருந்த மெட்டா நிறுவனத்தில் 2019 ஆம் ஆண்டு துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பணியில் இணைந்தார். அவர் பணியில் இருந்த காலகட்டத்தில் மெட்டா, வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் யூசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்காற்றி, இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே மெட்டா நிறுவனத்தின் சேவைகளை கொண்டு சேர்த்தார். மெட்டாவில் பணியாற்றுவதற்கு முன்னர் ஸ்டார் இந்தியாவின் பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மான ஹாட்ஸ்டாரில் சிஇஓ-வாக நான்கு வருடங்கள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : ட்விட்டருக்கு மாற்றாக இணையத்தில் கிடைக்கும் டாப் 5 ஆப்ஸ்கள்!
“மெட்டா நிறுவனத்தில் இருந்த வரையில் அஜித்தின் சிறப்பான செயல்பாடுகளால் அந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் கிளை விட்டு வளர்ந்தது. நான்கு வருடங்களுக்கு மேல் மெட்டா நிறுவனத்தில் பணியாற்றிய அவர் நிறுவனத்தின் செயல்களை வடிவமைப்பதிலும் அதன் எதிர்காலத்தை கணக்கிட்டு மிக சரியாக வேலைகளை செய்து இந்தியாவில் தொழில் முன்னேற்றம் மற்றும் பல புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் இந்திய தொழில்துறையும், மெட்டாவின் பார்ட்னர்களும் மற்றும் மக்களும் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளனர். அஜித் சென்ற பிறகும் இந்திய மக்கள் மற்றும் எங்கள் பார்ட்னர்களுடன் மெட்டாவின் தொடர்பு வலிமையாகவே இருக்கும். இத்தனை காலம் எங்களுடன் சேர்ந்து பணியாற்றி மெட்டாவை வழி நடத்தி சென்ற அஜித்தின் எதிர்காலத்திற்கு நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம்” என மெட்டாவின் துணைத் தலைவர் நிக்கோலா மெண்டல்சன் தெரிவித்துள்ளார்.
மெட்டாவிலிருந்து விலகிய அஜித், மெட்டாவின் நேரடி தொழில் போட்டியாளரான ஸ்னாப் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார். அந்நிறுவனத்தில் அவர் APAC பகுதியின் தலைவராக செயல்படுவார் என்று தெரிகிறது. இந்நிறுவனத்தின் ஸ்னாப்சாட் (snap chat) என்ற சமூக வலைத்தள செயலியானது மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று, அதிக யூசர்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.