* சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுடன் தனியாக சென்றார்* எடப்பாடி அணியில் கோஷ்டி மோதல் உச்சகட்டம்சென்னை: எம்ஜிஆர் 35வது நினைவு நாளையொட்டி நேற்று சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அவரது சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆனால், சி.வி.சண்முகம் மட்டும் தனியாக சென்று மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35வது நினைவுநாளையொட்டி நேற்று காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தொண்டர்கள் சென்னை, மெரினா கடற்கரை அருகே உள்ள அவரது சமாதிக்கு ஊர்வலமாக சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவை சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்று காலை 11 மணிக்கு சென்னை, கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அவரது ஆதரவு நிர்வாகிகளும் உடன் சென்றனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினர் தனியாக உறுதி மொழி ஏற்றனர். எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை 11.30 மணிக்கு கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு தனியாக சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதாவது, சில நாட்களுக்கு முன் சி.வி.சண்முகம், பாஜ கூட்டணி பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்தை எடப்பாடி அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்து இருந்தார். இதனால் சி.வி.சண்முகம் கடந்த சில நாட்களாக எடப்பாடி அணியில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் சி.வி.சண்முகம் தனியாக சென்று எம்ஜிஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியது, எடப்பாடி அணியில் ஏற்பட்டுள்ள விரிசலை உறுதிபடுத்தியுள்ளது. இதேபோன்று சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் அணியினரும் தனித்தனியாக வந்து எம்ஜிஆர் சமாதிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதிமுகவில் 4 அணியினராக நேற்று எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்ததால் கடற்கரை சாலையில் காலை முதல் பிற்பகல் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு சந்திரசேகரன் மாலை அணிவித்தார்.
35வது நினைவுநாளையொட்டி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
Share
