பட மூலாதாரம், Reuters
யுக்ரேன் தலைநகர் கியவ்வின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியின் பின்புறம் ஹெலிகாப்டர் ஒன்று கீழேவிழுந்து நொறுங்கிய விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உடன் 8 பேர் பயணித்துள்ளனர். புரோவரி புறநகர் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் உள்துறை அமைச்சர் அவரது முதன்மை அமைச்சர் யேவியென் யெனின் மற்றும் செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோரும் பலியாகினர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் யுக்ரேன் நாட்டின் அவசர சேவைக்கு உரியது என்று தேசிய காவல் தலைவர் இஹோர் க்ளைமென்கோ பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.
புரோவரியில் நிகழ்ந்த இந்த இடர்பாட்டில் 29 பேர் காயமடைந்தனர் என்றும் 18 பேர் உயிரிழந்தனர் என்றும் கியவ் பிராந்திய ராணுவ நிர்வாக தலைவர் ஒலெக்சி குலேபா தெரிவித்துள்ளார்.
விபத்தை தொடர்ந்து மழலையர் பள்ளி அருகே தீ பற்றியது. இதையடுத்து குழந்தைகளும், ஆசிரியர்களும் கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டனர். தீப்பற்றி எரிந்த கட்டிடத்தின் முன்பாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைந்த காணப்படுகின்றன.
விபத்து நிகழ்ந்தபோது, இருட்டாகவும் பனிமூட்டமாக இருந்துள்ளது. குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகே விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக மழலையர் பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் மோதியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: