மீனின் தலைப்பகுதியைக் கைகளால் தூக்கிப் பார்த்தால், மீனின் வால்பகுதி கீழே தொய்ந்து தொங்கிய நிலையில் இருந்தால், அது கெட்டுப்போன மீன். கெடாத மீனாக இருந்தால் மீனின் தலைப்பகுதியைத் தூக்கும்போது வால் பகுதி விரைப்பாகத் தெரியும்.
ஃபார்மலின் ரசாயனம் பூசப்பட்ட மீன்களில் இருந்து மருந்து வாடை வீசும். அதை வைத்தே அது ரசாயனம் கலக்கப்பட்டது எனக் கண்டுபிடித்து விட முடியும்.
மீனின் கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும். ரத்த நிறத்திலோ, மங்கிய வெளிர் நிறத்திலோ கண்கள் இருக்குமேயானால் அது நெடுநாள் ஐஸில் வைக்கப்பட்ட மீனாகத்தான் இருக்கும்.
கடல் மீன்களுக்கு மட்டுமல்ல, ஆறு மற்றும் குளங்களில் பிடித்த மீன்களையும் மேற்கூறிய வகைகளில் பரிசோதித்துப் பார்த்தே வாங்க வேண்டும். குளத்து மீன்களை ஐஸ்கட்டியில் வைத்தால் சுருங்கிவிடும். ஆகையால் குளத்து மீன்களை ஐஸில் வைத்து உண்ணக் கூடாது. தவிர, அவை இறந்துவிட்டாலும் உண்ணக் கூடாது. உயிருடன் பிடித்தே, சமைத்து உண்ண வேண்டும்.