இதுகுறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேசிய சில அதிகாரிகள், “கரூர் மாவட்டத்தில் மாதாந்தர ஆய்வுகள் மேற்கொண்டபோது, நிறைய குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் அதிகம் இருப்பதைக் காண முடிந்தது. அதிலும், இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது. அதேபோல், பலரும் குடும்பநல அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தனர். அதனால், இங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தோம்.
பெண்களுக்குச் செய்யப்படும் டியூபெக்டமி குடும்பநல அறுவை சிகிச்சையை, அறுவைசிகிச்சை முறையிலோ, லேப்ராஸ்கோப்பி முறையிலோ செய்ய வேண்டும். ஆனால், இதுவே ஆண்களுக்கு உயிர் அணுக்கள் வரும் பாதையை ரிங் மாதிரி போட்டு அடைத்தால் போதுமானது. பெண்களைவிட, ஆண்களுக்கு இதை செய்வது எல்லா வகையிலும் நல்லது. ஆனால், `ஆண்களுக்கு செய்தால், அவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும்’ என்று சிலர் தவறாக நினைப்பதுதான், இதில் வருத்தமான விசயம்.
ஆண்கள் குடும்பநல அறுவைசிகிச்சை செய்துகொள்வது, மனைவிக்கும் குடும்பத்துக்கும், குடும்பப் பொருளாதாரத்துக்கும், இந்தச் சமூகத்துக்கும் செய்யக்கூடிய பெரும் உதவி. அதை அவர்களுக்கு உணர்த்தத்தான், கரூர் மாவட்டத்தில், சர்வதேச ஆண்கள் தினத்தில், குடும்பநல அறுவைசிகிச்சை செய்து கொள்ள முன்வரும் ஆண்களுக்கு, `தங்கத் தந்தை’ என்ற விருது கொடுக்க முடிவெடுத்தோம்.
பொதுவாக, இப்படி குடும்பநல அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு, அரசு ரூ.2,000-க்கும் குறைவாகத்தான் ஊக்கத்தொகை தருகிறது. ஆனால், நாங்கள் ஆட்சியரின் சுய உதவி நிதியில் இருந்து, தலா ரூ.5,000 தருவதாக அறிவித்தோம். அல்லது அரசு மூலம் கிடைக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச வெள்ளாடுகள், வீடுகள், இலவச கறவை மாடுகள், மானியத்துடன்கூடிய கடன், வேளாண்மைத்துறை மூலம் கிடைக்கும் பசுமைக் குடில் அமைத்தல், சொட்டுநீர் பாசன வசதி என்று 10 திட்டங்களில் ஏதாவது ஒன்றில் முன்னுரிமை என்று அறிவித்தோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள தம்பதி இதற்குத் தகுதியானவர்கள்.