டெல்லியில் மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் 1,349 வேட்பாளர்கள் களம்கண்டனர். ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க-வும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. டிசம்பர் 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 134 இடங்களைக் ஆம் ஆத்மி-யும், 104 வார்டுளை பா.ஜ.க-வும் கைப்பற்றியது. இந்நிலையில் டெல்லி பா.ஜ.க தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா செய்தியாளர்களிடம், “டெல்லியின் மேயர் தேர்வில் மக்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பார்கள். டெல்லிக்கு பா.ஜ.க மேயர்தான் இருப்பார். நகரசபைத் தேர்தலில் கட்சி மாறுதல் தடுப்புச் சட்டம் பொருந்தாது என்பதாலும், மேயர் பதவிக்கு எந்தக் கட்சியும் உரிமை கோர முடியும் என்பதாலும் கடைசி நேர மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கூறியது சர்ச்சையானது.
இந்த நிலையில்தான், 10 டெல்லி கவுன்சிலர்களை வேட்டையாட ரூ.100 கோடி பேரம் பேசப்பட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக மூத்த ஆம் ஆத்மி தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையில், “மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்களை குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கியது போன்ற யுக்தியில், டெல்லியிலும் கேவலமான ஆட்டத்தில் இறங்கியிருக்கிறது.