Wrestlers Protest | கபில் தேவ் தலைமையில் 1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு | Gavaskar, Kapil Dev, other 1983 World Cup stars support Wrestlers protest

Share

புதுடெல்லி: ‘பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அடங்கிய 1983 உலகக் கோப்பை பேட்ஜ் கிரிக்கெட் வீரர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது சாம்பியன்களான மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட காட்சிகளைக் கண்டு நாங்கள் மன வேதனை அடைந்தோம். கஷ்டப்பட்டு அவர்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் தூக்கி ஏறியும் அவர்களின் போராட்டம் குறித்து அறிந்து கவலையடைந்தோம். பல வருட முயற்சி, தியாகம், மன உறுதி, உழைப்புடன் தொடர்புடைய அந்தப் பதக்கங்கள் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, மாறாக நாட்டின் பெருமைக்கும் மகிழ்ச்சிக்குமானவை.

இந்த விஷயத்தில் வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

புகாரும் போராட்டமும்: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் எல்லாம் அகற்றப்பட்டன.

இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் ட்விட்டரில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச திங்கள்கிழமை மாலை ஹரித்துவார் வந்தனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற அவர்களை, உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com