வெற்றிக்குப் பிறகு பேசிய ஈஷா சிங், “முன்னதாக உலக சாதனை படைத்து தங்கம் வென்றிருந்ததால் இந்தப் போட்டியில் மன அழுத்தம் அதிகமாக இருந்தது. நீங்கள் உயர்ந்த நிலையை அடையும் போது, அந்தச் சாதனையைத் தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் அதிகரிக்கும். அந்த அழுத்தத்தை வென்று மீண்டும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ஹாங்சோ எனக்கு மிகவும் பிடித்த இடம். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இங்கு நான்கு பதக்கங்கள் வென்ற நினைவுகள் இருப்பதால் இந்த மைதானம் எனக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்தது” என்றார்.
மனு பாக்கரும் தனது பதக்கம் குறித்து பேசுகையில், “இந்தப் பதக்கம் எனக்கு மிகவும் முக்கியமானது. இது அடுத்த கட்ட வெற்றிகளுக்கான அடித்தளமாக இருக்கும். என் ஆட்டத்தில் என்ன சிறப்பாக செயல்படுகிறது, இன்னும் எதை மேம்படுத்த வேண்டும் என்பதில் தெளிவை இந்தப் போட்டி கொடுத்துள்ளது. உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல இந்த அனுபவம் மிகவும் உதவும்” என்று தெரிவித்தார்.
இந்த வெற்றியால் ஹாங்சோ உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சைன்யம் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் கணக்கைத் தொடங்கியிருந்தார்.
பதக்கப் பட்டியலில் தற்போது 6 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் தொடர்கிறது.
உலக சாம்பியன்ஷிப் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள முக்கிய சர்வதேச போட்டிகளுக்கு முன்பாக, இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியின் இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.