அக்டோபர் மாதம் நெருங்கியதும், இந்த நோய்த் தொற்றின் தீவிரம் குறைந்து, காய்ச்சலால் (flu) பாதிக்கப்படத் தொடங்கினர் குழந்தைகள். 102 டிகிரி வரை வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்தனர். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இந்தக் காலகட்டத்திலேயே கோவிட் தொற்றுக்களும் நீடித்துக் கொண்டே இருந்தன. இந்த மூன்று வைரஸ் நோய்த் தொற்றுகளையும் ட்ரிபில்டெமிக் (Tripledemic) என்று அழைக்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் கோவிட் பரவலை விட, ஆர்.எஸ்.வி மற்றும் ஃப்ளு வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்த மூன்று தொற்றுகளும் ஒருசேர நீடித்துக் கொண்டே இருப்பதால், நோய் கட்டுப்பாட்டு மையங்கள் நோய் பரவலைத் தடுக்க தீவிர முயற்சி எடுப்பதோடு, ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன.
பொதுவாக ஒருநபர் சளி மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுவது இயல்பானது. பெரியவர்களுக்கு வருடத்திற்கு 2 – 3 முறை சளி பிடிக்கும். இதுவே குழந்தைகள் என்று வரும்போது கூடுதலாக வருடத்திற்கு 12 முறை கூட இப்படி ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, வெயில் கார்னெல் (Weill Cornell) மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பேராசிரியரும், நோயெதிர்ப்பு நிபுணருமான ஜான் பி.மூர் கூறுகையில், “மூன்று வயதுள்ள குழந்தைகள் இப்போது முதன்முறையாக சில வைரஸ்களுக்கு ஆளாகிறார்கள் என்பதால், உடல்நல பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் அதிக சுமையாக உணரலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.