தற்போது மியான்மர் எனப்படும் அன்றைய பர்மாவில் இருந்து தமிழகம் திரும்பிய ஒரு குடும்பம், மதுரை சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை அருகில் ஆரம்பித்த இடியாப்பக்கடை, இன்று மூன்று தலைமுறைகளைக், கடந்து 12 கிளைகளுடன் பாரம்பர்ய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
பன் பரோட்டா, ஜிகர்தண்டா என மதுரைக்காரர்களின் உணவுக் காதலில் பர்மா இடியாப்பத்துக்கும் முக்கிய இடமுண்டு. ஆவியில் வேகவைக்கும் ஆரோக்கியமான உணவு, பஞ்சுபோல மென்மை, சுவை என 44 வருடங்களாக மதுரை மக்களை கவர்ந்துவரும் உணவு இது. இடியாப்பத்துடன் காரச்சட்னி, தேங்காய்ப்பால், தேங்காய்த்துருவல் என வழங்கப்படும் இது மதுரை வீதிகளில் சுடச்சுட மணத்துக்கிடக்கிறது.
மதுரையின் ஓர் அடையாளமாக, மாலை நேரங்களில் பசியாற, வயிறாற ஆவி பறக்கச் சுடச்சுடக் கிடைக்கும் பர்மா இடியாப்பத்திற்கு மவுசு அதிகம். சுவைத்தால்… அடடா. ரெண்டு இடியாப்பம் போதும்… ரூ.16 செலவோடு இரவு சாப்பாடு முடிந்துவிடும். சி.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் பர்மா இடியாப்பக்கடையில் பிஸியாக இருந்த உரிமையாளர் விஜயகுமாரிடம் பேசினோம்.