
பட மூலாதாரம், rk_arvind99
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையின் எதிர்புறத்தில் போலீஸ் கூடுதல் தலைமை இயக்குநர் இருந்த அலுவல்பூர்வ காரை படம் பிடித்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
அதற்கு காரணம், அந்த ட்விட்டர் பயனர் அந்த படங்களை தமது பக்கத்தில் பகிர்ந்தபோது தமிழ்நாடு காவல்துறை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கங்களையும் டேக் செய்ததுதான்.
சமூக ஊடகங்களில் இதுபோல ஆதாரத்துடன் படங்கள் பகிரப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் அல்லது வாகன ஓட்டி மீது நடவடிக்கை எடுத்து, அந்த விவரத்தை தமிழ்நாடு காவல்துறையும் போக்குவரத்து காவல்துறையும் தங்களுடைய பக்கத்தில் பகிரும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.
தற்போதைய விவகாரத்தில், சம்பவ நாளான நவம்பர் 13ஆம் தேதி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் இருந்த கிழக்கு கடற்கரை சாலையில் போக்கும் பாதைக்கு எதிர்புறத்தில் தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபி ஆக உள்ள பெண் உயரதிகாரியின் அலுவல்பூர்வ கார் சென்றுள்ளது.
அதுதான் இப்போது சர்ச்சை ஆகியுள்ளது.
அந்த காரில் சம்பந்தப்பட்ட உயரதிகாரி இருந்தால் மட்டுமே அதில் இருப்பவர் டிஜிபி அல்லது கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர் என்பதை காண்பிக்கும் மூன்று நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட நீல நிற போர்டு காரில் வெளிப்படுத்தப்படும். அதிகாரி இல்லாத நேரத்தில் அந்த கார் செல்வதாக இருந்தால் அந்த நீல நிற போர்டு ஒரு கவராலோ துணியாலோ மூடப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், TN06 BG 1090 என்ற பதிவு எண் கொண்ட அந்த கார் தவறான பாதையில் செல்வதை காட்டும் இரண்டு படங்களை அரவிந்த் ஆர்கே என்ற ட்விட்டர் முகவரி கொண்ட நபர் தமது பக்கத்தில் பகிர்ந்து, தவறான பாதையில் செல்ல போலீஸ் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி உள்ளதா என்று கேள்வி எழுப்பி @tnpoliceoffl @ChennaiTraffic @cctpolice ஆகிய முகவரிகளுக்கு டேக் செய்திருந்தார்.
இந்த இடுகையை அவர் நவம்பர் 13ஆம் தேதி இரவு 9.14 மணிக்கு பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து மறு தினமான நவம்பர் 14ஆம் தேதி இரவு 8.05 மணிக்கு அரவிந்த் ஆர்கே என்ற ட்விட்டர் முகவரிக்கும் அவரால் டேக் செய்யப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் முகவரிகளுக்கும் அனுப்பிய பதிலில், சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் தவறான பாதையில் சென்றதால் அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அந்த தொகையை அவர் கட்டி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், MORTHW
அந்த ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராத ரசீதும் அந்த இடுகையில் இணைக்கப்பட்டிருந்தது.
அந்த ரசீதின் கீழே ‘உடனடி அபராதத் தொகை நிலுவையில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மோட்டார் வாகன சட்டத்தின் 213(5)(e) பிரிவின்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரசீதில் கூறப்பட்டிருக்கிறது
டிஜிபி பெயரில் வாகனம்
இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல் வாகனங்களுக்கான அபராதத்தை காவல்துறை மூலமாகவோ https://echallan.parivahan.gov.in/ என்ற இந்திய போக்குவரத்து அமைச்சக அபராதம் செலுத்தும் லிங்க் மூலமாகவோ செலுத்தும் வசதி, கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது.
அபராதம் விதிக்கப்படும் வாகனம் அல்லது அது தொடர்புடைய எண் இருந்தால் போதும், இந்த அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக செலுத்தி விடலாம்.
இதையடுத்து சென்னை பெருநகர காவல்துறை அதன் ட்விட்டர் பக்கத்தில் இணைத்திருந்த அபராத ரசீது விவரத்தை இந்த இணையதளத்தில் பதிவிட்டு பார்த்தபோது, அபராதம் செலுத்தப்பட்ட வாகனம், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் பெயரில் இருந்ததும் திருவான்மியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அபராதத்தை விதித்திருப்பதும் தெரிய வந்தது.
அந்த அபராதத் தொகை, அபராதம் விதிக்கப்பட்ட நவம்பர் 14ஆம் தேதியே பேடிஎம் மூலம் செலுத்தப்பட்டதற்கான ரசீதும் இந்திய போக்குவரத்துத் துறை இணையதளத்தில் இடம்பெற்றிருந்தது.
பட மூலாதாரம், MORTHW
பாராட்டும் எதிர்ப்பும்
இந்த நிலையில், சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையை பலரும் பாராட்டி இடுகைகளை பகிர்ந்துள்ளனர். சிலர் அந்த நடவடிக்கை தொடர்பாக கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
“ஒரு டிஜிபி வாகனத்துக்குள் இருக்கும்போது அவரது அனுமதி இல்லாமல் ஓட்டுநரால் பொறுப்பின்றி வாகனத்தை இயக்கி இருக்க முடியுமா? அந்த அதிகாரிக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்று ஒரு ட்விட்டர் பயனர் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
அதே சமயம், “சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சரியான நிலையில்தான் வாகனத்தை இயக்கினாரா இல்லை அவர் மது அருந்தியிருந்தாரா என்பது விசாரிக்கப்பட்டதா?” என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மற்றொருவர், சமீபத்தில் சென்னை பெரம்பூரில் எதிர்பாதையில் கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 1,500 அபராதம் விதிக்கப்பட்டதாக இடுகை பகிர்ந்திருந்தார்.
அவருக்கு பதிலளித்துள்ள காவல்துறை, “அந்த ரசீதை பகிருங்கள், கூடுதல் குற்றங்களும் முந்தைய அபராதத்துடன் சேர்க்கப்படலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
இதற்கு அந்த நபரிடம் இருந்து எந்த பதில் இடுகையும் வரவில்லை.
ஹரிகுமார் என்ஜி என்ற ட்விட்டர் பயனர், “சென்னை கேசினோ சினிமாஸ் அடுத்துள்ள மீரான் சாஹிப் தெருவுக்கு வாருங்கள். அங்கு ‘நோ என்ட்ரி’ பலகையை வைத்திருக்கும் பான் கடை இருக்கும். அங்கு வந்தால் அதிகமாக வசூல் செய்யலாம், விதி மீறலில் ஈடுபடுவோரையும் ஒழுங்குபடுத்தலாம்” என்று கூறியுள்ளார்.
சேகர்பாலா123 என்ற முகவரியைக் கொண்ட ட்விட்டர் பக்கத்தில் “சென்னை போரூரில், போலீஸ் கூடுதல் டிஜிபி வாகனத்தைப் போலவே எதிர்புறத்தில் வந்த போலீஸ் ஜீப் ஒன்றின் படத்தை பகிர்ந்து, இந்த வாகனம் மீதும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்த இடுகைக்கு இதுவரை எந்த பதிலையும் சென்னை போக்குவரத்து காவல்துறை வழங்கவில்லை.

காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் உயிரினங்கள் – இப்படியும் நடக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: