உலக பக்கவாத தினத்தை (அக்டோபர் 29) முன்னிட்டு, அவள் விகடன் மற்றும் சேலம் Manipal Hospitals இணைந்து `பக்கவாதம்… ஆரம்பத்திலேயே கண்டறிவோம்! நிரந்தர குறைபாடுகளைத் தவிர்ப்போம்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தியது. மருத்துவமனையைச் சேர்ந்த மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்.ரகுநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:
பக்கவாதம் பரம்பரையாக வருவதற்கு வாய்ப்பு உள்ளதா?
பக்கவாதம் பரம்பரையாக வருவதற்கு 25% வாய்ப்பு உள்ளது. அதற்கான சரியான காரணங்களை இதுவரையிலான ஆராய்ச்சியில் கண்டறிய முடியவில்லை. பொதுவாக குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்கும். அதனால் பெற்றோருக்கு இதுபோன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் இருந்தால் அவர்களின் பிள்ளைகள் 35 வயதிலேயே இந்த நோய்களுக்கான பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளியில் செய்து கொள்வது நல்லது.