அமெரிக்காவின் பிரபல இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜான் ஆர்.டைசன், போதையில் யாரென்று தெரியாத ஒரு பெண்ணின் படுக்கையறையில் தூங்கியதால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
முன்னதாக இந்தச் சம்பவம் நடந்த ஞாயிறு அன்று, ஃபயெட்வில்(Fayetteville) நகரின் ஒரு பெண், தன் வீட்டில் யாரோ ஒருவர் படுத்திருப்பதாக போலீஸுக்கு போனில் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, போலீஸ் அங்கு வந்த பார்த்ததில், அங்கிருப்பவரின் உடையிலிருந்த ஐ.டி மூலம் அவர் ஜான் ஆர்.டைசன் என்று தெரியவருகிறது. பின்னர் அவரை எழுப்பியிருக்கின்றனர். ஆனால், டைசன் போதையில் இருந்ததால் போலீஸின் வார்த்தைகளை அவரால் கேட்கமுடியவில்லை. அதையடுத்து அவர்மீது போதை மற்றும் குற்றவியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் கைதுசெய்யப்பட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இதுசம்பந்தமாக வரும் டிசம்பர் 1-ம் தேதியன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜராவர் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அந்த நிறுவனம், “இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால், இது அவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் நாங்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை” என்று கூறியிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் டைசன் இந்தச் சம்பவம் குறித்து, “என் தனிப்பட்ட நடத்தைக்காக நான் வெட்கப்படுகிறேன். நான் பெரும் தவறு செய்துவிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.