34 வயது இளைஞராக ஒவ்வொரு விக்கெட்டின் போதும் அடுத்த முனையில் உள்ள பார்ட்னரின் பவுண்டரியையும் சிக்ஸரையும் தன்னுடையதாக பாவித்துக் கொண்டாடும் அவரின் குணம், அவர் ஏன் அணியின் அச்சாணி என்பதைப் பறைசாற்றுகிறது.
2016-ல் தோனி, “அடிலெய்டில் ஒரு ஸ்டாண்டுக்கு கோலியின் பெயர் சூட்டப்பட வேண்டும். அந்தளவிற்கு அவர் இங்கே ரன்களைக் குவிக்கிறார்” என்று கூறியிருந்தார். அடிலெய்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவுமே அவரது இரும்புக் கோட்டைதான். அதிக ரன்களான 3300 ரன்களை ஆஸ்திரேலியாவில் குவித்த இந்தியராக முன்னதாக சச்சின் இருக்க, அதை 3350 ரன்களோடு கோலி முந்தியிருக்கிறார். எல்லாக் களத்திற்குமானவர், எல்லாக் காலத்திற்குமானவர் என நிரூபித்தும் வருகிறார்.
ஆக, டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 என முப்படைக்கும் அவர் தளபதிதான்.
டி20 உலகக்கோப்பை அணியிலேயே அவருக்கு இடமிருக்காது என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. காகங்களின் கருத்துகளால், கழுகின் சிறகுகள் பலவீனமடையவா போகின்றன?! அப்படி ஏசியவர்கள் அதே இடத்தில்தான் வட்டமிட்டுக் கொண்டுள்ளார்கள். அல்லது கியரை மாற்றி கோலியின் பக்கம் வந்துவிட்டனர். ஆனால் கோலியோ, அதிக ரன்களைக் குவித்தவர் என இந்த உலகக்கோப்பை தொடரையே தனது பெயரில் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்.
From the Ashes, A fire shall be woken,
A light from the shadows will spring,
Renewed shall be the blade that was broken,
The crownless shall again be KING…
– Tolkien –
டோல்கின் சொன்னதைப் போல,
முடி இழந்ததாகக் கூறப்பட்ட மன்னன்,
சாம்பலிலிருந்து நெருப்பாக,
நிழலிலிருந்து ஒளியாக,
மறுபடியும்,
சக்ரவர்த்தியாக அரியணை ஏறியிருக்கிறார்!
இனி அவரது சாம்ராஜ்யத்துக்கு என்றுமே சரிவில்லை…
பிறந்தநாள் வாழ்த்துகள் கோலி!