மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3வது ஆண்டு படிப்பவர் ஷியாம். தானே மாவட்டம் டோம்பிவலியை சேர்ந்த ஷியாம் தொழிலதிபர் ஒருவரின் மகன் ஆவார். கடந்த ஆண்டு இதே கல்லூரியில் படிப்பை முடித்த சாகர், சுபம், ரோஹன் ஆகியோர் தங்களது கல்லூரி படிப்பு முடிகிறது என்பதால் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பார்ட்டி பண்ணை வீடு ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பார்ட்டிக்கு ஷியாம் அழைக்கப்பட்டு இருந்தார். பார்ட்டியில் ஷியாமிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்தனர். அதன் பிறகு ஒரு பெண்ணின் துணையோடு ஷியாமை பயன்படுத்த ஆபாச வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை ஷியாமிடம் காட்டி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடப்போவதாக கூறி மிரட்டி சீனியர் மாணவர்கள் மூன்று பேரும் பணம் கேட்க ஆரம்பித்தனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து ஷியாம் தனது வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் வீட்டில் இருந்து தங்க நகைகளை திருடி கொண்டு வந்து சீனியர் மாணவர்களிடம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் தொந்தரவு அதிகரித்ததால் வேறு வழியில்லாமல் இது குறித்து ஷியாம் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே இது குறித்து ஷியாம் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து கோலாப்பூரில் இருந்து சாகர் என்பவரை மட்டும் கைது செய்துள்ளனர். மற்ற இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஷியாம் தொழிலதிபர் மகன் என்பதை தெரிந்து கொண்டு மூவரும் இந்த மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டதாக இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.