ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இதுவரை 217 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்த விசைப் படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டது. அதில் 130-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நீண்ட காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுக் கிடந்ததால் அவை பழுதாகின. அதனால், யாழ்ப்பாணத்தில் உள்ள பொம்மை வெளியில் உள்ள திறந்தவெளி பணிமனையில் பழுதான படகுகள் பிரித்து எடுக்கப்படும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இலங்கையில் கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் படகிலிருந்து பிரித்து எடுக்கப்படும் மரப்பலகைகள் இலங்கை மக்களுக்கு விறகாக விற்கப்பட்டு வருகின்றன.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்குத் தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.